×

சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் மாசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை என்பதால்படையெடுத்து வந்த பக்தர்கள் கூட்டம்

பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் மாசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 5 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். மாசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையான இன்று சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதலே திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை,காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். பொது தரிசனம், கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கோவிலுக்கு வெளியே 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் 5மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.பின்னர் சிறுவாபுரி முருகன் கோவிலில் சுமார் 40,000 மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் மாசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை என்பதால்படையெடுத்து வந்த பக்தர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Siruvapuri Murugan Temple ,Masi ,Periyapalayam ,Sami ,Balasubramanya Swami ,Siruvapuri ,Periyapalayam, Tiruvallur district ,
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய...